உணவு தேடி அலைவதால், ஆக்ரோஷத்தில் தனியாகச் செல்வோரை தாக்கி வருவதால், வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவோர் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர்.
இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான கணபதி என்பவர், வழக்கம் போல் டீ குடிப்பதற்காக ஆம்பூர் மெயின் ரோட்டில் இருந்து தாட்டன்பட்டிக்கு மாலை சுமார் 5 மணியளவில் நடந்து சென்றுள்ளார்.
அங்குள்ள டீக்கடை பின்புறம் பதுங்கியிருந்த இரண்டு கரடிகளில் ஒரு கரடி, கணபதி மீது பாய்ந்து நகங்களால் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர், சுதாரித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதில் இரண்டு கரடிகளும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டன. இதனையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து, கரடியின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கணபதியிடம் பேசினோம்.
“தினமும் மாலையில் டீ குடிப்பதற்காக அந்த டீக்கடைக்கு செல்வேன். ஆனால், அன்று டீக்கடை பூட்டியிருந்தது. இதனால், அங்கிருந்து கிளம்ப முயற்சித்தேன்.
என்னைப் பார்த்த கரடிகள் உறுமல் சத்தம் எழுப்பியது. நான் ஓடுவதற்குள் என்னை தாக்கியது. கரடியால் எனக்கு நேர்ந்த துயரம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது” என்றார்.
தன்னந்தனியாக உலா வந்த கரடிகள், தற்போது கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.