திருவாரூர்: நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் அடிச்சேரி, செருமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான கே. பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து சித்தனக்குடியில் சம்பா சாகுபடி வயல்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பயிர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் தஞ்சை மாவட்டம் காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம், மூர்த்தியம்பாள்புரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருவாரூர் மாவட்டம் வடுவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம், செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளிடமும், சுமைப்பணி தொழிலாளர்களிடமும் நெல் கொள்முதல் பணியாளர்களிடமும் தற்போதைய கொள்முதல் நிலை குறித்து கேட்டறிந்தேன்.
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஏற்கெனவே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் 5000, 6000, 7000 என, குடோன்களுக்கு எடுத்துச் செல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன இவை தவிர ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் விற்பனை செய்வதற்காக நான்காயிரம் முதல் 8000 வரையிலான மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன.
இவை அனைத்தையும் விவசாயிகள் மழையில் நனைந்து விடாதபடி மூடி வைத்ததால், நெல் மணிகள் முளைத்துவிட்டன. பல நெல்குவியல்களில் நெல்மணிகள் அவிந்து விட்டன. முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 800 மூட்டைகள் மட்டுமே நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்ததை உயர்த்தி ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்து உடனுக்குடன் பணம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் 2000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை சட்டமன்றத்திலேயே தெரிவிக்கிறார்.
இன்று காலை முதல் நெல் கொள்முதல் நிலையங்களில் நான் ஆய்வு செய்தபோது, அங்குள்ள சுமைப் பணி தொழிலாளர்களை கேட்டால் லாரிகள் முறையாக வருவதில்லை என தெரிவிக்கின்றனர். லாரி உரிமையாளர்களை கேட்டால் டீசலுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என்கிறார்கள். விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்து உற்பத்தி செய்து கொடுத்துள்ள நெல்லை எதற்காக இப்படி கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. திமுக அரசுதான் வேளாண் பட்ஜெட் கொண்டு வந்ததாக பெருமையாக சொல்கிறார்கள்.
ஆனால், வேளாண்துறை மானிய கோரிக்கையில் என்ன சொல்வார்களோ அதைத்தான் வேளாண் பட்ஜெட்டிலும் சொல்கிறார்கள். ஆகஸ்ட் 18-ம் தேதியே செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்ட நிலையில், அந்தத் தகவலை கூட தெரிந்து கொள்ளாமல் சட்டமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை.
நீங்கள் வேண்டுமானால் அனுமதியை வாங்கித் தாருங்கள் என தவறான தகவலை உணவுத்துறை அமைச்சர் பதிவு செய்கிறார். மேலும், ஆதார விலையை இந்த அரசு உயர்த்தி கொடுத்து விட்டதாக தெரிவிக்கிறார். அதே நேரத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதை அவர் மறந்துவிட்டார். 2021-ம் ஆண்டு விவசாயிகளுக்கு என்ன லாபம் கிடைத்ததோ, உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பால் அதே லாபம்தான் இன்றும் கிடைக்கும் நிலை உள்ளது.
எனக்கு கிடைத்த தகவல்படி திருவையாறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 13,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 12,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன. மாறனேரியில் 6,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை.திருவாரூர் மாவட்டம் காரிக்கோட்டையில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன, ஐந்தாயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன.
இப்படி டெல்டா மாவட்டங்களில் 30 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன. இவை அனைத்தும் முளைக்கத் தொடங்கி விட்டன. எனவே ஒட்டு மொத்தமாக நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது. எனவே, தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள அறுவடை நெற்பயிர்களின் நிலை குறித்து கணக்கெடுப்பு செய்து உடனடியாக உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இயக்கம் செய்யப்படாமல் உள்ள மூட்டைகளை விரைவாக இயக்கம் செய்ய வேண்டும் .
கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நிலை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் சென்று பார்க்கும் போது விவசாயிகள் கதறுகிறார்கள். 20 நாட்களுக்கு மேல் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்கிறார்கள்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு கடந்த 7-ம் தேதியே நான் அறிக்கை வெளியிட்டேன். அதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்பட்டிருந்தாலே இந்த பிரச்சனை வந்திருக்காது. எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றார்.