ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர், போட்டியின்போது செல்போன் பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கௌஹாத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது, 11-வது ஓவரில் கேமராக்கள் டக்-அவுட் பகுதியை நோக்கின.
அப்போது அணியின் மேலாளர் ரோமி பிந்தர் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அந்த செல்போன் திரையை உற்றுப் பார்ப்பது போன்ற காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது.
வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஐபிஎல் விதிமுறைகளை ராயல்ஸ் நிர்வாகம் மீறியுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் புகார்களை அடுக்கி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் தங்கும் பகுதி (PMOA) தொடர்பான விதிகள் மிகவும் கடுமையானவை. அணியின் மேலாளர் செல்போன் பயன்படுத்த அனுமதி உண்டு என்றாலும், அதை ‘டிரெஸ்ஸிங் ரூம்’ (Dressing Room) பகுதியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மைதானத்தின் ஓரத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் ‘டக்-அவுட்’ (Dugout) பகுதியில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது விதி.
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழையும்போதே தங்களது செல்போன்களை அணைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அணியின் தரவு பகுப்பாய்வாளர் (Analyst) மட்டுமே குறிப்பிட்ட இடத்தில் கணினியைப் பயன்படுத்த அனுமதி உண்டு.
MOBILE PHONE IN RR DUGOUT !
– Even though mobile phones are not allowed during matches in the Indian Premier League, Rajasthan Royals were seen breaking the rule and using a mobile phone during the match.pic.twitter.com/f1xzva1smX
— Venukumar (@venukumar4) April 11, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்ச் ரெப்ரி மற்றும் ஐசிசியின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு (ACSU) விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், ரோமி பிந்தருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சில போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
“டிரெஸ்ஸிங் ரூம் பகுதிக்குள் செல்போன் பயன்படுத்தியிருந்தால் இது பெரிய செய்தியாகி இருக்காது. ஆனால், ஆயிரக்கணக்கான கேமராக்கள் கண்காணிக்கும் டக்-அவுட் பகுதியில் இப்படிச் செய்தது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தியுள்ளது” என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.