இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் வேண்டுமென்றே அரசமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை அவமதிக்கும் செயலாகும். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும்.
ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. பொது மேடையில் அவதூறு பேசி வருகிறார் ஆளுநர். சட்டப்பேரவை மாண்பை பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது.
உரையை ஆளுநர் படிக்காமல் வெளியேறியதை இப்பேரவை ஏற்கவில்லை. உரையை ஆளுநர் படித்ததாக இப்பேரவை கருதுகிறது. உரையை ஆளுநர் படித்ததாக பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்படுகிறது. ஆளுநர் உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும்; வெளிநடப்பு இடம்பெறாது. ஆளுநர் உரையை படிக்காதது ஒரு நாள் செய்தியாக இதை கடந்துவிட முடியாது.
ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். ஆளுநர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு தெரிவித்தார்.
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இவர்களை தொடர்ந்து அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநருக்கு ஆதரவாகவும், சட்டசபை ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
