இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்குரிய வசதிகளும் பணியாளர்களும் முழுமையாக இல்லை. தலையில் அடிபட்டு வந்த நபருக்கு, தூய்மைப் பணியாளர்களின் மேலாளர் சிகிச்சை அளித்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், பெரும் ஆபத்து நேரிடும்.

இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பின்பு, அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். எனவே, சம்பந்தப்பட்ட மேலாளர் மீது மட்டுமல்ல, அவர் சிகிச்சை அளிக்கக் காரணமாக இருந்த பணி நேர மருத்துவர், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ”தூய்மை பணியாளர்களின் மேலாளர், தலையில் காயத்துடன் வந்தவருக்கு காயத்தை சுத்தம் மட்டுமே செய்கிறார். அவர் அருகே மருத்துவர் இருக்கிறார். மேலும், அங்கே செவிலியர்களும் இருந்தனர்” எனக் கூறினர்.