மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிந்து முடிந்தன. நிதி, ஐடி மற்றும் எண்ணெய் & எரிவாயு ஆகிய பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்பனை காரணமாக சென்செக்ஸ் 721 புள்ளிகள் சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 786.48 புள்ளிகள் சரிந்து 81,397.69 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 721.08 புள்ளிகள் சரிந்து ஒரு மாதத்திற்கும் மேலான குறைந்தபட்சம அளவான 81,463.09 புள்ளிகளுடனும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 225.10 புள்ளிகள் சரிந்து 24,837 புள்ளிகளாக நிலைபெற்றது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு முதலீட்டாளர்களின் மனநிலையைப் வெகுவாக பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிறுவனங்களின் முடிவுகள் மந்தமாக இருந்ததும், மந்தமான உலகளாவிய சந்தை ஆகியவற்றால் உள்ளூர் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்தனர்.
சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் அதன் ஜூன் காலாண்டு வருவாய் அறிவிப்பிற்குப் பிறகு 4.73 சதவிகிதம் சரிந்தது. பவர் கிரிட், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டிரென்ட், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை சரிவுடன் முடிந்த நிலையில் சன் பார்மா மற்றும் பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.