ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் எழுந்து வேலைக்குச் செல்லும்போது, “நமக்கு இன்னும் வசதிகள் இருந்திருக்கலாமோ” என்றோ அல்லது “நம்மால் இவ்வளவுதான் முடியும்” என்றோ பல நேரங்களில் பலர் நினைப்பதுண்டு.
ஆனால், எதுவுமே இல்லாத மனிதர் ஒருவர் நினைத்தால் ஒரு ஊரின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்பதற்கு வாழும் உதாரணம், கர்நாடகாவைச் சேர்ந்த ஹரேகளா ஹஜப்பா (Harekala Hajabba).
ஆரஞ்சு பழங்களைச் சுமந்து, தனியாளாக விற்று, ஒரு பள்ளிக்கூடத்தையே உருவாக்கிய இந்தச் சாதாரண மனிதரின் கதை, உங்களின் இன்றைய தினத்தைச் சிறப்பாகத் தொடங்க ஒரு மிகச்சிறந்த உந்துதலாக இருக்கும்.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள `நியூபடுப்பு” (Newpadupu) என்ற குக்கிராமம்தான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அந்த ஊரில் பள்ளிக்கூடம் என்ற ஒன்றே கிடையாது. வறுமையின் காரணமாக ஹஜப்பாவும் பள்ளிக்கூடத்துப் பக்கம் சென்றதில்லை.
மங்களூர் நகரப் பேருந்து நிலையத்தில் ஒரு கூடை நிறைய ஆரஞ்சு பழங்களைச் சுமந்து சென்று விற்பதுதான் அவருடைய தினசரி பிழைப்பு. ஒரு நாளைக்குச் சுமார் 150 ரூபாய் வரை மட்டுமே வருமானம் கிடைக்கும்.
ஒருநாள், வெளிநாட்டவர் இருவர் ஹஜப்பாவின் கூடையிலிருந்த பழங்களைப் பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் அதற்கான விலையைக் கேட்டனர். ஹஜப்பாவிற்கு ஆங்கிலம் புரியவில்லை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று தெரியாமல் ஹஜப்பா திருதிருவென முழிக்க, அந்த வெளிநாட்டவர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டனர்.