`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' – 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில் வசித்து வரும் 138 அருந்ததியர் சமூக குடும்பங்களுக்கு அரசால் பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த பட்டாக்கள் அரசு ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படாததால் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1994–95 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

பின்னர் இந்த நில உரிமை தொடர்பாக சையத் ரஹமத்துல்லா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அரசால் வழங்கப்பட்ட பட்டா செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இரு நீதிமன்றங்களும் நிலம் அருந்ததியர் மக்களுக்கே என்பதைக் உறுதிப்படுத்தியிருந்தன.

இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் அரசு ஆவணங்களில் பட்டாக்கள் பதிவேற்றம் செய்யப்படாததால், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.

மின்சாரம் இல்லாத இரவுகள் இங்கு வழக்கமானவை. குழந்தைகள் விளக்கின் வெளிச்சமின்றி படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அவசர நேரங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இரவுகள் நரகம் ஆகிறது. குடிநீர் மற்றும் சாலை வசதிகளும் போதுமான அளவில் இல்லை.

இந்த நிலையை மாற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த 70 நபர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் 17/02/2026 அன்று மாநில துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் அவர்களிடம் மனு வழங்கினார்கள்.

இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம் கூறுகையில், ”1995-ல் 138 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் அரசு அதிகாரிகள், குறிப்பாக ஆதிதிராவிடர் அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு ஆவணங்களில் இதுநாள் வரை பதிவு செய்யவில்லை.

பதிவு செய்யாத காரணத்தினால் அவர்கள் வீடு கட்டவும், மின்சார வசதி பெறவும் முடியவில்லை. 2026 காலத்தில் கௌதம புத்தர் நகரில் மின்சாரம் இல்லாமல் இருப்பது என்பது ஏற்புடையது அல்ல. இந்த மனு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிச் செயலர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களிடம் இது குறித்து தொலைபேசி மூலம் பேசப்பட்டுள்ளது,” என்றார்.

விரைவில் அவர்கள் வாழ்வில் ஒளி வீசும் என நம்புவோம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *