தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பழஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழஞ்சூர் செல்வம். இவர் திமுக-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில வர்த்தக அணி துணைத் தலைவராக இருக்கிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு அமைச்சர் கே.என்.நேரு மூலம் காய்நகர்த்தி வருகிறார்.
பட்டுக்கோட்டையில் பழஞ்சூர் செல்வத்தின் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதற்காக உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்களை வரவேற்கும் விதமாக விமரிசையான ஏற்பாட்டை பழஞ்சூர் செல்வம் செய்திருந்தார். அலங்கார பந்தல் நுழைவாயில், திமுக கொடி, தோரணம் எனப் பட்டுக்கோட்டை நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக பல கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையோரத்தில் பத்துக்குப் பத்து அளவில் ஸ்டாண்டிங் ப்ளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இதனை கட்சியினர் தட்டி என்பார்கள்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சாலையோரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் போட்டோவுடன் வரவேற்று வைக்கப்பட்ட தட்டியை அகற்றி வெளியே தெரியாமல் திருப்பி போடப்பட்டது.
“‘நாளைதான் திருமணம் (நேற்று) ஏன் அதற்குள் தட்டியை அகற்றுகிறார்கள்” என்பது தெரியாமல் கட்சியினர் குழப்பமடைந்தனர். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டை முழுக்க பேசுபொருளாயிற்று.