கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், மினி டைடல் பார்க் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதில் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பேருந்து நிலையப் பணிகள் முழுமையாக முடியாத நிலையில் அவசரகதியில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதையடுத்து பா.ஜ.க-வைச் சேர்ந்த பத்மநாபபுரம் நகராட்சி துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பணி முடிக்கப்படாத பேருந்து நிலையத்துக்குள் சென்று கண்ணில் கறுப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு முன்னதாகப் பேருந்து நிலையத்துக்குள் நுழைய முயன்ற நகராட்சி துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்களைப் போலீஸார் தடுக்க முயன்றனர். நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கவுன்சிலர்களைப் போகக்கூடாது எனச் சொல்ல போலீஸாருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி உன்னிகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி உன்னிகிருஷ்ணன் கூறுகையில், “தக்கலை பேருந்து நிலையப் பணிகள் முழுமையடையாத நிலையில், அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளன. பேருந்து நிலைய தரைத்தளத்தின் கான்கிரீட் பணிகள் 80 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன. போதிய கால அவகாசம் இன்றி பேருந்துகளை இயக்கினால், தரைதளம் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவறை வசதிகள் இன்னும் முழுமையடையவில்லை. அதற்குள் எதற்காக அவசரப்பட்டுத் திறக்க வேண்டும்? பணி முடிந்த பிறகு முதல்வர் காணொலிக்காட்சி மூலமாவது திறந்து வைத்திருக்கலாம்.