தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் தங்களின் சொந்த மண்ணில் கிட்டத்தட்ட அகதிகளாக அவதியுற்று வந்தாலும், மரபுவழிகளைப் பாதுகாத்து வருகின்றனர். பூ, இலை, மரப்பட்டை என இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வண்ணங்களாக குழைத்து காலத்திற்கும் அழியாத ஓவியங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் கொண்டவர்கள் குறும்பர் பழங்குடிகள்.

அந்த மரபில் வந்த பழங்குடி ஓவியர் கிருஷ்ணன், 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாறை ஓவியங்களை புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். தொல்குடிகளின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வியலை ஓவியங்கள் மூலம் உயிரூட்டி வந்த இவர் அண்மையில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு குறும்பர் ஓவியக்கலை உலகின் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை அறிவித்தது மத்திய அரசு. கிருஷ்ணனின் மறைவால் வறிய நிலையில் வாடும் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து வெளியில் தெரியவந்தது.