சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி எந்தப் பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மூன்று ஷாஹீன்ஸ் அணிகளை (பாகிஸ்தான் ஏ அணிகள்) அறிவித்துள்ளது.
இந்த ஷாஹீன்ஸ் அணி வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது. பிரதான போட்டிக்கு முன்னதாக, பயிற்சிப் போட்டிகள் பிப்.14 முதல் 17 வரை நடைபெறவிருக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஏற்கனவே விளையாடி வந்ததால், பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும், இந்திய அணியினர் பிப்.15 ஆம் தேதி துபாய் சென்றடைய திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க… இந்தியா 3-0*..! கடைசி ஒருநாள் போட்டியிலும் மண்ணைக் கவ்விய இங்கிலாந்து!