காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கீழம்பி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார்.
இந்த ஊராட்சியில் 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஏகாம்பரநாதர் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து 1,100 நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வீராபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு, கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராமசபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கிராம பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், ஜி.எஸ்.டி. சாலையில் நடை மேம்பாலம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர். ஆட்சியர் இக்கோரிக்கைகளை உடனடியாக சரி செய்வதாக உறுதியளித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் பேருந்து நிலையம் வேண்டி கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை கேட்டறிந்து எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக கட்டித் தருவதாக அவர் தெரிவித்தார். இதேபோல் மாவட்டம் முழுவதும் 359 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் பெரும்பாலானவற்றில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருத்தணி அருகே தரணிவராகபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், ஆட்சியர் பிரதாப் சிறப்பு பார்வையாளராக பங்கேற்று, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சோழவரம் அருகே அத்திப்பேடு ஊராட்சியில், எண்ணூர் – மாமல்லபுரம் சாலைக்காக அகற்றப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம், கிராம சேவை கட்டிடம் உள்ளிட்ட 5 கட்டிடங்களை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.