இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார், திடீரென தன்னுடைய ஆதரவாளர்களை தனியாக திரட்டி சந்தித்திருக்கிறார். கூட்டத்தில் பாஜகவில் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து பேசினர்.

சரத்குமார் முன்னிலையில் பேசிய ஆதரவாளர்கள், ‘நாட்டாமை கட்சியில் சேர்ந்த உடனேயே நம் எல்லாருக்குமே பதவி வாங்கி கொடுக்க வேண்டுமென நினைத்தார். பலமுறை பாஜகவில் அதற்காக போராடினார். கடுமையான போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் 19 பொறுப்புகளையும் மற்ற பொறுப்புகளில் 80 பேருக்கும் மட்டுமே வாங்கி கொடுக்க முடிந்தது.
தலைவர் நம் சார்பில் 257 பேருக்கு பதவி வழங்கக் கோரி பாஜகவுக்கு லிஸ்ட் கொடுத்தார். ஆனால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நமக்கு கிடைத்தது. பாஜகவில் 68 மாவட்டத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு நான்கு இடங்கள் நம்முடைய கட்சியினருக்கு கிடைத்திருக்க வேண்டும். அதையும் பாஜக கொடுக்கவில்லை. பெரும் இன்னல்களுக்கு பிறகுதான் சொற்ப ஆட்களையாவது தலைவர் பாஜகவில் பதவிக்கு கொண்டு வந்தார்.

ஆனால், அப்படிப்பட்ட தலைவருக்கு பாஜக 2 ஆண்டுகளாக எந்த பதவியும் கொடுக்கவில்லை. எங்களுக்கு பதவி கிடைக்கிறதோ இல்லையோ, தலைவருக்கு தேசிய அளவில் பதவி வேண்டும். அவர் அதிகாரத்துக்கு வர வேண்டும். பாதுகாவலர்களோடு சைரன் வைத்த வண்டியில் அவர் செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் கொண்டு சேர்த்தவர் நம்முடைய தலைவர்தான். அவரை எல்லா ஊர் நிகழ்ச்சிகளுக்கும் பேச அழைக்கிறார்கள். ஆனால், என்ன பதவியில் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என கூறிக்கொண்டு தலைவரால் கூட்டத்துக்கு செல்ல முடியும்? இன்று காலை பாஜகவில் பரப்புரை குழு என ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். அதில் கூட தலைவர் பெயர் இல்லை. தென் மாவட்டங்களில் தலைவர் இறங்கினால் கூட்டம் அள்ளும். ஆனால், அதற்கு கூட தலைவரை பயன்படுத்தாமல் முடக்கிவிட்டார்கள். நம்முடை கட்சியை நாம் கலைத்திருக்கக்கூடாது’ என்றனர்.
மேலும் முன்னாள் தலைவர் அண்ணாமலை நாட்டாமைக்கும் அவருடைய ஆதரவாளர்களான நமக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்குமென உறுதி கொடுத்தார். நயினார் நாகேந்திரன் ஏன் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? தலைவர் பிரசாரம் செய்தால்தான் நயினார் நாகேந்திரனே வெல்ல முடியும். என்றும் கொந்தளித்தனார்