பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று ( சனிக்கிழமை ) முதல்வர் ஸ்டாலின் பரமக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைத்தார். முதல்வரின் பரமக்குடி வருகையினை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பரமக்குடி மணிநகர் பகுதியில் சோதனை சாவடியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி என்பவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த பெண் போலீஸார் சிலரும் அங்கு பணியில் இருந்தனர். அப்பெண் காவலர்கள் கழிவறைக்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மூலம் வீடியோ காட்சி பதிவாகியுள்ளன.
