விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில், தமிழக ஆளுநரின் விருப்ப நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் பத்மஸ்ரீ விருதுபெற்ற பறை இசை கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்டப்பட்டுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு பண்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தமிழக ஆளுநரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், “இந்த புதிய பயிற்சி மையம் தமிழர் கலாச்சாரத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்கும்.
பறை என்பது நமது அடையாளம். இது பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடன் இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பறையின் குறிப்புகளை காண்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியின் போது நமது கலாச்சாரத்தை அழிக்க முயன்ற போதிலும், நமது மூதாதையர்கள் இந்த கலையை பாதுகாத்தார்கள் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார்.

பிரதமர் மோடி வருவதற்கு முன், பத்ம விருதுகள் அதிகார மையத்திற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் வாழும், சமூகத்திற்கு சேவை செய்யும் அறியப்படாத நல்ல மனிதர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மாற்றத்தின் விளைவாகவே வேலுவாசன் போன்ற வைர நபர்களை கண்டுபிடிக்க முடிந்தது.