கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்துக்கு நேற்றுச் சென்ற ராஜேந்திரன் மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், “நீண்ட காலமாக அரசியலில் இருந்த நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. எனக்கு நிறைய மன ரீதியான சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜாவுக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி கட்சி என் மீது நடவடிக்கை எடுத்தது.