புதுக்கோட்டை: சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
விழாவில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: செல்போன் அனைவரையும் ஆக்கிரமித்து, அடிமையாக்கி உள்ளது. பெண் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. தனி அறையைத் தவிர, அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படுகின்றன. அன்பாக பேசினால் மயங்கிவிடக்கூடாது. சமூக வலைதளங்களில் சிக்கிக் கொண்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அதிலிருந்து மீண்டு வர முடியும். கவனச் சிதறல் ஏற்படாமல் இருக்க புத்தகம் வாசிக்க வேண்டும்.
பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இதேபோல, ஆசிரியர்களும் மாணவிகளைக் கண்காணித்து, தேவையான ஆலோசனை வழங்க வேண்டும் என்றார். ஆட்சியர் எம்.அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி,இணை இயக்குநர் வை.குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.