பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியுடன் தன்னுடைய மொபைல் போனை இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் ‘உங்க விஜய்… உங்க விஜய்… உயிரென வரவா’ என்ற பாடலை ஒளிப்பரப்பியுள்ளார். இதை பார்த்த பக்தர் ஒருவர், வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “இது கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கிறது. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக யானை பாதையில் தனித் தனியாக ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த இளைஞர் ஒலிப்பரப்பிய பாடல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேட்டிருக்கும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது அந்த பாதையில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டன” என்றனர்.