பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை

Spread the love

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழன் ஆப்கான் இராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலையில் பாகிஸ்தான் ஆப்கானில் உள்ள காபூல் மற்றும் கந்தகார் மீது குண்டுகளை வீசித்தாக்கி இருப்பது மோதலை மேலும் அதிகரித்துள்ளது.

அதோடு ஆப்கானுக்கு எதிராக பாகிஸ்தான் வெளிப்படையான போரை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”எங்களது பொறுமை எல்லையை தாண்டிவிட்டது. இப்போது ஆப்கானுக்கும் எங்களுக்கும் வெளிப்படையான போர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்

தாங்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 133 பேர் இறந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தங்களது தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது. கசாப் லில் ஹக் என்ற பெயரில் பாகிஸ்தான் இத்தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன, ஆனால் தாக்குதல் நடந்த இடம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், “பாகிஸ்தான் தெற்கே காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது”என்று குறிப்பிட்டுள்ளது.

ஒரு ஆப்கானிய அதிகாரி இது குறித்து கூறுகையில், “பாகிஸ்தானில் இருந்து திரும்பிய மக்களுக்கான டோர்காம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொதுமக்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் ஷெல்கள் முகாம்களை தாக்கியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக எங்கள் அகதிகள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து எல்லையில் உள்ள முகாம்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானில் ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேசமயம் தாங்கள் பாகிஸ்தானின் 19 முகாம்களை அழித்து சில ராணுவ வீரர்களை உயிரோடு பிடித்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *