பாஜகவின் கோபுரத்தில் கலசம் வைத்தவர் அண்ணாமலை என தமிழக பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் பேசியதாவது, என் மீது நம்பிக்கை வைத்து மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க தலைமைக்கு நன்றி. தமிழகத்தில் பாஜக முன்னவர்கள் ஒவ்வொரு படியாக கட்சியை வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு படியாக கட்டப்பட்ட பாஜக கோபுரத்தின் மீது கலசம் வைத்தவர் அண்ணாமலை. கலசம் மீது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் குடமுழுக்கு நடத்தப் போகிறோம். 2026இல் நிச்சயமாக தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும். தாமரை மலர்ந்தே தீரும்.
அண்ணாமலை புயலாக இருந்தால், நான் தென்றலாகத்தான் இருக்க முடியும். அதிமுகவில் இருந்தபோதே பாஜகவிற்கு வர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவார். பாஜகவில் முக்கிய பொறுப்பு தரவில்லையென கோபமும், வருத்தமும் இருந்ததுண்டு. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி, பெண்களை மதிக்காத ஆட்சியாக இது நடக்கிறது. இந்த ஆட்சியை வெகு விரைவில் விரட்டியடிக்க வேண்டும். அதற்கு பாடுபட வேண்டும். அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள், இனி காலில் காலணி அணிய வேண்டும்.
பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பதவி!
ஆட்சி மாற்றத்துக்கு நேற்றே அமித்ஷா, அடிக்கல் நாட்டியிருக்கிறார். 2026இல் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி. அண்ணாமலை இன்றே காலணி அணிந்து கொள்ளலாம் என்றார். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டது. சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது. பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் உள்ளிட்டோர் சான்றிதழை அளித்தனர்.