அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த அவர், “இதைப் பற்றி நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும்.
அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். இதுவரைக்கும் எங்கள் கூட்டணியில் எடப்பாடி, நயினார், தினகரன், அன்புமணி, ஜி.கே வாசன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள்.
நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்திப்போம்.

திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் கட்சிகளின் எண்ணிக்கையை விட மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.