பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா மீது போக்சோ வழக்குப் பதிவு – பின்னணி என்ன?

Spread the love

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா ஓய்வுபெற்ற பிறகு பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். ​இந்த நிலையில் ஸ்ரீலேகா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோக்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாகக் குற்றம் சாட்டு எழுந்தது. இதுகுறித்து திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்ட சிவில் ரைட்ஸ் அண்ட் சோஷியல் ஜஸ்டிஸ் சொசைட்டியின் செயலாளர் ஜெயச்சந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீலேகா மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் கடந்த 26.02.2026 அன்று போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். முன்னாள் பெண் டி.ஜி.பி மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு குறித்து ஸ்ரீலேகா செய்தியாளர்களிடம் கூறுகையில், “முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் போலீஸில் பணியாற்றிய பெண் அதிகாரி நான். 2012-ம் ஆண்டு போக்ஸோ சட்டம் வந்த சமயத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைகளுக்காகவும், பெண்களுக்காகவும் மிக அதிகமாக செயல்பட்டிருந்தேன். நிர்பயா ஸ்கீம் வந்த சமயத்தில் அதன் நோடல் ஆப்பீசராக நான் இருந்தேன்.

போக்ஸோ வழக்கு

எனது யு டியூப் சேனலில் நான் வெளியிட்ட வீடியோவில் கிளிரூர் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளிப்படுத்தியதாக என் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த பாலியல் வழக்கை எனது தலைமையிலான டீம் விசாரித்தது. அதில் அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டது. கேரளா போலீஸ் விசாரித்தபின்னர் அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை எஃப்.ஐ.ஆரில் மைனர் என குறிப்பிட்டிருந்தோம். விசாரணையில் அந்த பெண் சிறுமி அல்ல என்பது தெரியவந்தது. 2002-ல் நடந்த வழக்கில் 2003-ம் ஆண்டு அந்த பெண் மரணமடைந்தார் என நினைக்கிறேன். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் வயது இருபதை நெருங்கி இருந்தது. அந்த பெண் மைனர் அல்ல 18 வயதுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே என் மீதான போக்ஸோ வழக்கு விசாரணை நிலைநிற்காது.

முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா

நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே என்மீதான விமர்சனங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வேண்டும் என்றே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணாக, அம்மாவாக, போலீஸ் அதிகாரியான நான் ஒரு குழந்தைக்கோ, பெண்ணுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் நான் செயல்படமாட்டேன். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக நான் செயல்பட்டது இல்லை, இனியும் செயல்படமாட்டேன். நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயர் வலைத்தளங்களில் இப்போதும் உள்ளன. எனது வீடியோ வெளியாகி ஏழு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என நினைக்கிறேன். போலீஸ் விசாரித்தால் இதில் போக்ஸோ பிரிவு நிலைநிற்காது என்பது தெரியவரும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *