“ஜென்டில்வுமன்’ படத்தை முடித்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளில் களமிறங்கிவிட்டார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். விஜய் ஆண்டனியை கதாநாயகனாக வைத்து இவர் எடுத்திருக்கும் படத்திற்கு ‘லாயர்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இப்போது அப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இறுதிக்கட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார். நம்மிடையே பேசியவர், “நேர்மையாக இருந்ததற்கான ரிசல்டும் ‘ஜெண்டில்வுமன்’ படத்தில் எனக்குக் கிடைத்தது. எனக்கு அப்படத்தினுடைய வரவேற்பு ஒரு தெளிவையும் கொடுத்திருக்குனு சொல்லலாம். அப்படம் ரிலீஸ் ஆனதும், விஜய் ஆண்டனி ‘உங்க படம் எனக்குப் பிடிச்சிருக்கு. உங்க ஸ்டைல்ல நம்ம ஒரு படம் பண்ணலாம்’னு சொல்ல உடனடியாக ‘லாயர்’ படம் தொடங்கிடுச்சு.
நான் முன்பே இந்தக் கதையில் வொர்க் பண்ணினதுனால, முதற்கட்டப் பணிகளுக்கு பெருசா நேரமெடுத்துக்கல. உடனடியாக படப்பிடிப்புக்குக் கிளம்பிட்டோம்.

படமும் நல்லபடியாக உருவாகியிருக்கு. இறுதிக்கட்ட வேலைகள் இப்போ மும்முரமாகப் போயிட்டு இருக்கு.” என்றவர், “நான் எப்படியான விஷயங்களை உறுதியாக சினிமாவில் பேசப்போறேன்னு ‘ஜெண்டில்வுமன்’தான் தெளிவைத் தந்தது. இப்படியான படங்களுக்கு மக்களின் ஆதரவு பெரியளவில் கிடைக்காதுனு சொல்வாங்க. ஆனா, அதையெல்லாம் உடைக்கிற மாதிரி மக்கள் தந்த வரவேற்பு எனக்குள்ள பெரும் நம்பிக்கையை விதைச்சிருக்கு.
இப்போ ‘லாயர்’ படமும் அழுத்தமான விஷயங்களைப் பேசுது. ரெண்டாவது படத்தின் வேலைகள் நடக்கும்போதே, என்னுடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளையும் தொடங்கிட்டேன். கூடிய விரைவில் அதனுடைய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வரும். அதுவும் மக்களுக்கான படைப்பாகதான் நிச்சயமாக இருக்கும். கலை யாவும் மக்களுக்கானதுனு நம்புகிறேன். அதனால, என்னுடைய குரல் மக்கள் நலன் சார்ந்து இருக்கும்.” என்றார்.