சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று தீபாவளி புத்தாடைகள் விற்பனை களைகட்டியது. தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. பண்டிகைக்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும் வெள்ளி, சனிக்கிழமையில் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய கடைசி விடுமுறை நாளான நேற்று, தங்கள் குழந்தைகள், பெற்றோர், உறவினர்களுக்கு புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர். அதனால் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக சென்னை, தியாகராய நகர், ரங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாக தென்பட்டன. பாதுகாப்புப் பணியில் சுமார் 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் உயர் கோபுரங்களை அமைத்து, திருடர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தவண்ணம் இருந்தனர். சாதாரண உடையிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்பகுதிகளில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. துணிக் கடைகளுக்கு இணையாக சாலையோரக் கடைகளிலும் துணிகள் மற்றும் அணிகலன்கள் விற்பனை அனல் பறந்தது. நேற்று சென்னை, புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், அவ்வப்போது சிறு தூரல் மழை பெய்ததாலும், துணிக் கடைகளுக்கு வந்த மக்கள் ரம்மியமான குளிர்ந்த சூழலை ரசித்தபடி பொருட்களை வாங்கினர்.
புத்தாடைகளை வாங்கிய பின் அனைவரும் உணவகங்களை நோக்கிச் சென்றதால், உணவகங்களிலும், இனிப்பகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. இதேபோன்று புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலை, புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, பூந்தமல்லி கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.