வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாகும்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த உள் ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வராமல் போனது வேறு கதை.
ராமதாஸ் சாதித்தது என்ன?
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டங்கள் ஊடாக ராமதாஸ் சாதித்தது என்னவென்பது சற்றே திரும்பிப் பார்க்க வேண்டிய அரசியல் பாதை. அரசியல் கட்சியான பாமக, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6% வாக்குகளைப் பெற்று தன்னை அடையாளப்படுத்தியது.
1991 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. அதுவே பாமக சந்தித்த முதல் சட்டசபை தேர்தலும் கூட. அதில், பண்ருட்டி தொகுதியில் எஸ்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவின் தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். தேர்தல் அரசியலில் திமுக, அதிமுக என பாமக செல்லாத கூட்டணியே இல்லை என்று சொல்லலாம்.
ஆனால், மத்தியில் பங்கு வகித்தபோது ராமதாஸ் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். அதில் ஒன்றுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது. 2008-ல் ஐக்கிய முற்போக்குகூட்டணி கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ், போராடி இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார்.
தொடர்ந்து, மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததிலும் பாமகவின் பங்கு மிகவும் முக்கியமானது.
‘நானோ, என் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டோம்’ என்று சூளுரைத்தவர் ராமதாஸ். ஆனால், அன்புமணி விஷயத்தில் அவர் அதை பின்பற்றத் தவறினார். இப்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீகாந்தியையும் அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சியின்போது, அன்புமணி ராமதாஸ் அமைச்சரானார். அன்புமணி மத்திய அமைச்சராக தேசிய ஊரக சுகாதார இயக்கம் உருவாக வழிவகுத்தார். ‘108 ஆம்புலன்ஸ்’ திட்டம் அறிமுகமானதும் அவரால்தான்.
ராமதாஸ் கடந்து வந்த அரசியல் பாதை நீளமானது. ஆனால், அத்தனை போராட்டங்கள், மத்திய அமைச்சரவையில் பங்களிப்பு, அன்புமணியின் சுகாதாரத் துறை பங்களிப்புகள் என்று இருந்தாலும் கூட தமிழகத்தில் இதுவரை பாமக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.