சென்னை: அன்புமணியின் ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்துக்கு’ தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ‛தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற பெயரில் நாளை (ஜூலை 25) முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினரை சந்திக்க உள்ளார். இந்நிலையில், ‘தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவது மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி நாளை (ஜூலை 25) முதல் நவ.1-ம் தேதி வரை ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதை முன்னிட்டு ‘உரிமை மீட்க.. தலைமுறை காக்க.. அன்புமணியின் நடை பயணம்’ என்ற வாசகங்கள் அடங்கிய இலச்சினையை அன்புமணி நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில், இந்த நடைபயணத்துக்கு தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் டிஜிபியிடம் மனு அளித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.