மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, “ஆரம்ப காலத்தில் ஆர்.பி. சவுத்ரி சாரிடம் கதை சொல்லப் போனால், யார் ஹீரோ எனக் கேட்பார். ஜீவா ஹீரோ என்றால்… ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது, வேற யாரையாவது சொல்லுங்க’ என்று விளையாட்டாகச் சொல்வார். ஆனால், அப்படி வளர்ந்த ஜீவா இன்று ஒரு தயாரிப்பாளருக்குத் தேவையான மிகச்சிறந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்.
காலையில் சொன்ன நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். தயாரிப்பாளருக்குச் சுமை தராத இப்படிப்பட்ட ஹீரோக்கள் இப்போது தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே உள்ளனர். அதனால்தான் ஜீவாவின் வெற்றியை ஒரு சக நடிகனாக நான் அதிகம் ரசிக்கிறேன். நாங்கள் மாலை 6 மணிக்குச் சென்று காலை 6 மணி வரை ஷூட்டிங் இருக்கும். ஆனால், அங்கிருந்த உதவி இயக்குநர்களும், செட் அசிஸ்டென்ட்களும் நள்ளிரவு 2 மணிக்கே வந்து செம்பருத்தி பூக்கள் நடுவது உள்ளிட்ட வேலைகளைத் தயார் செய்வார்கள்.