பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்தையுடன் விபத்துக்கு முன் பேசிய கடைசி தொலைபேசி உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது.
“நாளை பேசலாம்” என்ற கடைசி வார்த்தை
மும்பை வொர்லியைச் சேர்ந்த பிங்கி மாலி, தனது தந்தை சிவ்குமார் மாலியிடம் “அப்பா, நான் அஜித் பவாருடன் பாராமதிக்கு பறக்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு நான் நாந்தேட் செல்கிறேன். நாளை பேசலாம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த “நாளை” இனி ஒருபோதும் வராது என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
“நான் என் மகளை இழந்துவிட்டேன். என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். என் மகளின் உடலை மட்டும் தர வேண்டும். மரியாதையுடன் அவளது இறுதி சடங்கை செய்ய வேண்டும். அதுதான் எனது ஒரே விருப்பம்,”என்று சிவ்குமார் மாலி தெரிவித்துள்ளார்.
பிங்கி மாலி சமீப காலமாக அஜித் பவாருடன், அதே சிறிய ரக விமானத்தில் பல பயணங்களில் இணைந்து சென்றதாகவும், அந்த நாளும் வழக்கம்போல தனது பணிக்காகவே விமானத்தில் இருந்ததாகவும் சிவ்குமார் கூறியுள்ளார்.