பார்சலில் வந்த தாலி; ஏற்காட்டில் இளம்பெண்ணை கொன்று வீசிய இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்!

Spread the love

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம். இவரது மனைவி சுமதி (25). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், சுமதிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டில் இருந்து சுமதி காணாமல் போனதாக ஏற்காடு காவல் நிலையத்தில் அவரது கணவர் சண்முகம் புகார் அளித்துள்ளார். ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஏற்காடு கொட்டச்சேடு பகுதியில் இருந்து சண்முகத்திற்கு, வெங்கடேஷிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த போது, சுமதியின் தாலி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம், தனது மனைவி மாயமான விவகாரத்தில், வெங்கடேஷ் மீது சந்தேகம் உள்ளதாக ஏற்காடு போலீசாரிடம் கடந்த 25ம் தேதி புகார் தெரிவித்தார். இதையடுத்து பல் வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், வெங்கடேசை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சுமதியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட வெங்கடேஷ்

இதுகுறித்து விசாரணையில் போலீசாரிடம் வெங்கடேஷ் கூறுகையில், “சுமதிக்கும், எனக்கும் தொடர்பு இருந்தது. கடந்த 23ம் தேதி மதியம், தோட்ட பகுதியில் இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது சுமதிக்கு ஒரு போன் வந்தது. போனில் அழைப்பது யார்? என நான் கேட்டபோது, அவர் சரிவர பதில் கூறாமல் மழுப்பினார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், சுமதியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர், கோணிப்பையில் உடலை மூட்டையாக கட்டி, எனது டூவீலரில் எடுத்து சென்று, கொட்டச்சேடு வழியாக குப்பனூர் சாலையில், முனியப்பன் கோயில் அடுத்த வளைவில், சுமார் 300 அடி பள்ளத்தில் வீசிவிட்டேன்” என்று தெரிவித்தார். பின்னர், அவர் கூறிய இடத்திற்கு, வனத்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறையினர் சென்று தேடினர். அப்போது, 300 அடி பள்ளத்தில் கோணிப்பையில் கட்டி வீசப்பட்டிருந்த சுமதியின் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *