கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள ஜேசுராஜபுரம் ஊராட்சிக்குஉட்பட்ட கவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்சி (வயது 24). இவரும், ஓசூரில் கட்டட வேலைச் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த சூர்யா (28) என்ற இளைஞரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அவர்கள் கீழ்பென்னாத்தூரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கருத்து-வேறுபாடு காரணமாக பிரின்சி அவரைப் பிரிந்து குழந்தையுடன் தனது தாய் வீடான கவுண்டன் கொட்டாய்க்கு சென்றுவிட்டார்.
சூர்யாவும், அவ்வபோது சென்று தனது குழந்தையை பார்த்துவிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 11-ம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாகக் கூறி பிரின்சி அஞ்செட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர். இதையறிந்த சூர்யா, தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். `சந்தேக மரணம்’ என போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், குழந்தை இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அதில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த பிரின்சிக்கும், ஜேசுராஜபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (40) என்பவருக்கும் திருமணத்தை மீறி தகாத தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
பெரியநாயகம், தி.மு.க-வில் இளைஞரணி கிளைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். பிரின்சி இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, தி.மு.க பிரமுகர் பெரியநாயகத்தை கைது செய்த போலீஸார், அவர் மீது `போக்சோ’ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளைச் சிறையிலும் அடைத்திருக்கின்றனர்.