சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம்.
“அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம்.
அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார்.
அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார்.
அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார்.