ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார்.
அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது.
‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள்.

சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார்.
சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம்.
அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது.
பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை.
“கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.