"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர்  தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தொலையாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை கூறுகையில், “உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு எதிரான மனநிலையில் பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. புல்டோசர் ஆட்சி நடக்கிறதோ அந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது. அதற்கு விட்டுவிட மாட்டோம் என்று உறுதியாகத் தமிழ்நாட்டு மக்கள் சபதம் ஏற்றிருக்கிறார்கள். ஆகவே, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியை எங்களுடைய இந்தியா கூட்டணி பெறப் போகிறது. அந்த எழுச்சி கண்முன் தெரிகிறது. சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடக்கும்போது, காவல்துறையை, உளவுத்துறையைக் கையில் வைத்துக்கொண்டிருந்த எடப்பாடி, ‘நான் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன்’ என்றார். அப்போது சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருந்ததா? பொள்ளாச்சி வழக்கில் பெண்களுக்கெல்லாம் பாலியல் துன்புறுத்தல் இருந்தது. அப்போது சட்டம் ஒழுங்கு ஒழுங்காக இருந்ததா. அந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஏதாவது தவறுகள் நடந்தால் முதலமைச்சர் வெளிப்படைத் தன்மையோடு நடவடிக்கை எடுக்கிறார். வழக்கை விசாரிக்கட்டும் உண்மை வெளியே வரட்டும் என சி பி.ஐ-க்கு வழக்கை மாற்றுகிறார்.

கிள்ளியூரில் செல்வ பெருந்தகை பிரசாரம்

இந்தி திணிப்பு வரலாறு பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தெரியும். இந்தி திணிப்பு போராட்டம் பற்றி அவருக்கு தெரியுமா. ‘இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும், நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம்’ என நேரு கடிதம் கொடுத்தார். அதை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பின்பற்றினர். சோனியா காந்தியும், ராகுல் காந்தி ஆகியோர் இன்னும் அதை பின்பற்றுகின்றனர். இந்தி திணிக்கக் கூடாது, அவர்களுக்கு வேண்டும் என்றால் படிக்கலாம். இந்தி பிரச்சார சபா தி நகரில் இருக்கிறது. யாராவது போய் அதை மூடினார்களா. எடப்பாடிக்கு அரசியலே தெரியாது. இல்லை என்றால் ‘பால்டாயில்’ சாப்பிட்டு சாக வேண்டியதுதானே என ஒரு தலைவரைப் பத்திப் பேசுவாரா. கொரோனாவால் செத்துப் போயிருக்கலாம் என எவ்வளவு அவதூறாக பேசுகிறார்.

குளச்சலில் தாரகை கத்பர்ட்டை ஆதரித்து செல்வ பெருந்தகை பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சரையும் அட்டாக் பண்ணி இருக்கிறார், முதலமைச்சரையும் அட்டாக் செய்திருக்கிறார். ஒரு மனிதன் இதைப்பேசலாமா? ஜனநாயகவாதி இதைப் பேசலாமா? எனவே காங்கிரஸ் பேரியக்கம் எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் இதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஆட்சிக்கு வரத் துடித்துக்கொண்டு பா.ஜ.க மீது சவாரி செய்துகொண்டு இருக்கிறார். பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது. கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, பௌத்த மக்களுக்கு எதிராக, சீக்கிய மக்களுக்கு எதிராக, எல்லா மக்களுக்கும் எதிராகவும் பா.ஜ.க இருக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *