‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.
‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிரியே பார்வையாளர்களும் இருப்பது போல தோன்றுகிறது.
‘டைட்டில் யாருக்கு?’ என்கிற ஆர்வம் யாரிடமும் சுத்தமாக இல்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 94
திரும்பவும் உள்ளே வரும் போட்டியாளர்கள், பழைய விவகாரங்களைக் கிளறி போட்டியாளர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த சீசனில் அது அதிகமாக நடக்கிறது. இது விக்ரமிற்கு தெரியாதா?
சாண்ட்ரா, திவ்யா போன்ற கடப்பாறைகளையெல்லாம் விழுங்கியவர், வியானா என்கிற குண்டூசி தாக்குதலுக்கு உடைந்து போகிறார். திவ்யா பிரச்னை அவரை பலமாக தாக்கியிருக்கிறது போல. “நான் போறேன்யா.. என்னை விட்டுடுங்க..” என்று தேவர் மகன் கமல் மாதிரி தழுதழுத்தவருக்கு இன்று காலையில் ஞானோதயம்.
காமிரா முன்னால் வந்து “வியானாவிற்கு தமிழ் வேற சரியா தெரியாது. சோஷியல் மீடியால சொல்றத வச்சு வந்து பேசறாங்க.. நான் தப்பா நடந்திருந்தா மக்கள் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த அளவிற்கு உழைச்சிருக்கேன்.” என்று சரியான டிராக்கில் சென்றவர், மீண்டும் குட்டையைக் குழப்பி, “எனக்கு டைட்டில் மேல ஆசையில்ல. ஆனா மக்களுக்காக விளையாடுவேன்” என்று யூடர்ன் அடித்தார். (‘ஒண்ணு தலன்னு சொல்லு.. இல்ல தளபதின்னு சொல்லு. கமல் மாதிரியே பேசாத’ மோமெண்ட்!)
“இப்படியல்லாம் பேசறது தப்புன்னு எனக்கே தெரியுது” என்றும் சொல்கிற விக்ரம், கிளைமாக்ஸ் நேரத்தில் இப்படி பேசுவது அவருக்கு வீழ்ச்சியைத் தரும் என்று தெரியாதா?