அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய ஜெய் ஷா, “2019 அக்டோபர் 23-ம் தேதி பி.சி.சி.ஐ செயலாளராக நான் பொறுப்பேற்றேன். அன்றிலிருந்து 2024 டிசம்பர் 1-ம் தேதி வரையில் நாங்கள் நிறைய முடிவுகளை எடுத்தோம், நிறைய சாதனைகள் படைத்தோம்.
உள்ளூர் போட்டிகள் கட்டமைப்பை வலுப்படுத்தினோம். சம ஊதியத்தைக் கொண்டு வந்தோம். மகளிர் ஐ.பி.எல் (WPL) தொடங்கினோம். எந்தச் சர்ச்சையும் இல்லாமல் ரூ. 50,000 கோடி மதிப்பிலான ஒளிபரப்பு உரிமைகளை விற்றோம்.
அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய கிரிக்கெட் அகாடமியை அமைத்தோம். பெர்த், கேப் டவுன், சிட்னி, லார்ட்ஸ் போன்ற அனைத்து வகையான பிட்ச்களும் இங்கு பயிற்சிக்காக உள்ளன.

ஆனால், இவற்றில் எனக்கு பிடித்தவை சம ஊதியம் கொண்டு வந்ததும், மகளிர் ஐ.பி.எல் ஆரம்பித்ததும்தான். அதன் பலனைச் சமீபத்தில் பார்த்தோம் (மகளிர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது).
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் அவரது அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். அனைவரின் இதயங்களையும் நீங்கள் வென்றுவிட்டீர்கள். மேலும், ஆண்கள் வெற்றி பெற அழுத்தம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.
பெற்றோர் தங்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தால் அதில் ஆண் பிள்ளைகள் விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா போன்று உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால், பெண் பிள்ளைகளை ஹர்மன்பிரீத் கவுராகவோ அல்லது ஸ்மிருதி மந்தனாவாகவோ உருவாக்க விரும்புவதில்லை.
நாங்கள் சம ஊதியம் கொண்டுவந்துவிட்டதால் இனி பெற்றோர் தங்களின் பெண் பிள்ளைகளை ஹர்மன்பிரீத் கவுராகவோ அல்லது ஸ்மிருதி மந்தனாவாகவோ உருவாக்குவார்கள்” என்று கூறினார்.