மதுரை: பிரதமர் மோடியின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிரதமர் சுதந்திர தின விழா உரையில், தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையையே கைவிட வேண்டும், பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பிஹார் தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றாலும்கூட, அது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பதால் வரவேற்கிறோம்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக விசிக தொடக்கத்திலிருந்தே குரல் கொடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுத் துறை தனியார் மயம் தீவிரமடைந்து வருகிறது. தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். தனியார் மயமாக்கக்கூடாது என்று தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, இப்பிரச்சினையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் சிலரின் நோக்கமாக இருக்கிறது.
தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாக இருப்பதால் அந்தப் பிரச்சினையைப்பற்றி திருமாவளவன்தான் பேச வேண்டும் என்ற பார்வையும் ஏற்புடையதல்ல. இது எல்லோருக்குமான பிரச்சினை. சென்னையில் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார்மயப்படுத்த அரசாணை பிறப்பித்ததே அதிமுகதான். அந்த அரசாணையைத்தான் தற்போது செயல்படுத்துகின்றனர்.
போராடுபவர்கள் யாரும் அரசாணை பிறப்பித்த அதிமுக பற்றி பேசவில்லை. இதை திமுகவுக்கு வக்காலத்து வாங்குவதற்காக சொல்லவில்லை. திமுக செய்தால் எதிர்க்க வேண்டும், அதிமுக செய்தால் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள அரசியல் அணுகுமுறையாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் புதிய அணுகுமுறையைக் கையாளுகிறார்.
அதற்கு காலம்தான் பதில் சொல்லும். அவர் மக்களைத்தேடிச் செல்லும் காலம் விரைவில்வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்ந்து, கோ.புதூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருமாவளவன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார்.