வியாழக்கிழமை இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. இந்தப் பயணத்தின் மிக முக்கிய முடிவுகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட இலக்கு வைத்துள்ளன. இந்தியா-இஸ்ரேல் இடையிலான அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், உலக ஹோலோகாஸ்ட் நினைவு மையமான ‘யாத் வாஷேமைப்’ பார்வையிடவும் திட்டமிட்டுள்ளார்.

இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் பதட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் நடைபெறுவது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக, இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார், “உலகம் வேகமாக மாறிவரும் சூழலில், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன. அவற்றைச் சந்திக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதன் மூலம் இரு நாட்டு பாதுகாப்பு உறவை ஆழப்படுத்த ஆலோசிக்கப்படும்.
பொருளாதார ரீதியாக இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள நிலையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய நகர்வு பொருளாதாரக் கூட்டாண்மைக்கு பெரும் வேகத்தைக் கொடுக்கும்” என்றார்.