அந்த செயலை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க சார்பில், நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேபோல பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.க.வின் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போலீஸார் பேரிகார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது பா.ஜ.க அலுவலக வாசலில் உருட்டுக்கட்டை, தடியுடன் நின்றிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ்காரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது இருதரப்பினரும் கல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர்.
அதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.