கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா. அவர் பா.ஜ.க-வில் இணைந்து திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலின்போது திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஸ்ரீலேகா முன்னிறுத்தப்பட்ட நிலையில், பா.ஜ.க பெரும்பான்மை பெற்றபிறகு வி.வி.ராஜேஷ் மேயராக்கப்பட்டார். இதனால் ஸ்ரீலேகா அதிருப்தியில் இருந்தார்.
கட்சியில் சேர்ந்த சமயத்திலும், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டபோதும் அவரை கொண்டாடினார்கள். அதன்பிறகு ஸ்ரீலேகாவை கண்டுகொள்ளவில்லை, அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி ஸ்ரீலேகாவின் செயல்பாட்டிலும் வெளிப்பட்டு வருகிறது.
அதே சமயம் கேரளாவில் முதன் முதலாக ஒரு மாநகராட்சியை, அதிலும் தலைநகரை கைப்பற்றிய பா.ஜ.க-வை டெல்லி தலைமை கொண்டாடி வருகிறது. மேலும், திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களை டெல்லிக்கு அழைத்து விருந்துகொடுக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக கேரளா எக்ஸ்பிரஸில் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுக்கு டெல்லி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த விருந்தில் கலந்துகொள்ள கவுன்சிலர் ஸ்ரீலேகா-வுக்கு அழைப்பு விடுத்தும் அவர் டெல்லிக்கு செல்லவில்லை. பா.ஜ.க தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால்தான் பிரதமர் மோடி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலேகா புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாயின.
மேலும், வரும் சட்டசபை தேர்தலில் ஸ்ரீலேகா போட்டியிடபோவதில்லை என அறிவித்துள்ளதால் அவர் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி விருந்தில் கலந்துகொள்ளாமல் இருந்தால் தனது எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு தெரியவரும், அதன்மூலம்.தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அவர் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என ஸ்ரீலேகா தெரிவித்துள்ளார்.