சென்னை: பிரபல ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) நிபுணர் கே.மாதங்கி ராமகிருஷ்ணன் (91), வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது கண்கள் சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. மருத்துவர் மாதங்கி ராமகிருஷ்ணனின் மகள் பிரியா ராமச்சந்திரன், பிரபல குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருமகன் பி.ராமச்சந்திரன் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணராகவும் உள்ளனர்.
தீக்காயம் மற்றும் ஒட்டுறுப்பு சிகிச்சைத் துறை முன்னோடியாக விளங்கிய மாதங்கி ராமகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவை நிறுவினார். அவர் கண்டுபிடித்த ‘கொலாஜன் மெம்பரன்’ எனப்படும் திசு புரத பட்டைகள்தான் தற்போது தீக்காய சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பல்வேறு நாடுகளிலும், சர்வதேச அரங்குகளிலும் மருத்துவ சொற்பொழிவுகளை ஆற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு பத்ம, பி.சி.ராய் விருது, அவ்வையார் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிறுவனரும், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணருமான மறைந்த எம்.எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவியான மாதங்கி, தனது இறுதிக் காலம் வரை குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனைக்கு சேவையாற்றி வந்தார். மாதங்கி ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.