பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகி இருக்கும் “முதல் முதலாய்’ இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது.
இந்த ஆல்பத்தின் பாடலை எழுதியதோடு, இசையும் அமைத்திருக்கிறார் இயக்குநர் ரவிச்சந்திரன் ச்ரீநிவாஸ். இதற்கு முன் ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’ ஆகிய ஹிட் படங்களை இயக்கியவர். ரிஷி தேவா- கைரா நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை இயக்கியவர் டிரஸ்டினா ஐசக்.
எம்.பி.பி.எஸ். மருத்துவரான டிரஸ்டினா, இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநராகவும் இருந்தவர். ஆல்பம் உருவானது குறித்து டிரஸ்டினாவிடம் பேசினோம்.

“சின்ன வயசுல இருந்தே சினிமா கனவு இருந்தது. ஆனா, என்னோட அம்மாவுக்கு நான் மருத்துவம் படிக்கணும்னு விருப்பம் இருந்தது. அவங்களுக்காக லண்டன் எம்.பி.பி.எஸ்ஸைப் படிச்சு முடிச்சேன். ஆனாலும் சினிமா ஆசை இன்னும் அதிகமாகவே இயக்குநர் பாலாவிடம் ‘அவன் இவன்’ படத்துல உதவி இயக்குநரா இருந்தேன்.
அங்கிருந்த கொஞ்ச நாள்ல ‘யாத்ரா’னு குறும்படம் ஒண்ணு இயக்கினேன். அதன் பிறகு கதைகள் எழுத ஆரம்பிச்சேன். சினிமா ரொம்ப எளிதான விஷயம்னு நினைச்சேன். ஆனா, உள்ளே வந்த பிறகுதான் இது ஒரு கடல்னு புரிஞ்சுக்கிட்டேன். காதல் ரொம்ப பிடிச்ச விஷயம். அதனால ஒரு அழகான காதல் கதையை இயக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கும் போது தான் ‘முதல் முதலாய்’ ஆல்பம் இயக்கற வாய்ப்பு அமைஞ்சது.
எனக்கு ‘கண்ணெதிரே தோன்றினால்’ ரவிச்சந்திரன் சாரை ரொம்ப வருஷமா தெரியும். ஒருநாள் ‘இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்க’னு அனுப்பியிருந்தார். அது அவரே எழுதி இசையமைச்ச பாடல். நான் எதிர்பார்க்கற மாதிரியே ஒரு க்யூட்டான காதல் பாடலாக இருந்ததால அதையே பயன்படுத்தலாம்னு முடிவு செய்தோம்.