வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழிநடத்த அந்த ஆண்டவனாலேயே முடியும்.
ஜாதகங்களில் காணப்படும் தோஷங்களில் முக்கியமானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் இருந்தால் முயற்சிகளில் தடை காணப்படும். திறமை இருந்தும் பெரிய வளர்ச்சி இருக்காது. இல்வாழ்க்கையிலும் நிம்மதியற்ற தன்மை இருக்கும். இப்படிப் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இவற்றில் இருந்தெல்லாம் நிவாரணம் தரும் தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில்.
மகிமைகள் இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வந்து பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொண்டால் வாழ்க்கையே மாறும் என்கிறார்கள் பக்தர்கள்.

இங்கு சுவாமி அருள்மிகு மகாலிங்கேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இந்த ஈசனை அம்பாள், விநாயகர், முருகன் முதலாக சகல தேவர்களும் வந்து வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள்.
ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர் ஆகியோரின் ஆலயங்கள் அமைந்திருக்க நடுவில் மகாலிங்கப் பெருமானின் கோயில் திகழ்கிறது. ஆகவே இத்தலத்தை பஞ்சலிங்கத் தலம் என்றும் போற்றுவர்.
சந்திரன், தன் 27 மனைவிகளோடும் இங்கு வந்து ஈசனை வழிபட்டுத் தன் சாபம் நீங்கப் பெற்றான். ஆகவே, இந்தத் திருத்தலம் சந்திரப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகளுடன் பிரமாண்டமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசிகளைக் குறிக்கும் மகாமண்டபத் தூண்கள் முதலாக அநேக அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது இந்த ஆலயம்.