நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், அவற்றின் விற்பனை பில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஹைதராபாத் உணவகத்தால் வெளிவந்த அதிர்ச்சி!
உணவக உரிமையாளர்களின் இந்த மோசடி, ஹைதராபாத் பிரியாணி கடை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அங்குள்ள பிரபல பிரியாணி கடைக்குச் சென்றனர்.
கடையில் இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விட பில்லிங் சிஸ்டத்தில் அதிக அளவில் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அது பற்றி விசாரித்தனர்.
சிக்கியது எப்படி?
ஹைதராபாத் பிரியாணி கடையின் பில் விவரங்களை எடுத்துச் சென்று ஆய்வு செய்தபோது, அதில் சில பில்கள் காணாமல் போய் இருந்தது. அவற்றை பிரியாணி உரிமையாளர் சிஸ்டத்தில் இருந்து அகற்றினாரா அல்லது காணாமல் போனதா என்ற சந்தேகம் எழுந்தது. பில்லிங் மென்பொருளில் பதிவாகும் ஒவ்வொரு பில்லும் சிஸ்டத்தில் இருக்கும். அந்த பில்லை அப்புறப்படுத்தினாலும், அந்த பில் இருந்த இடத்தில் ஒரு டிஜிட்டல் மார்க் அடையாளம் இருக்கும்.
ஹைதராபாத் வருமான வரித்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட பிரியாணி கடையின் பில்லிங் மென்பொருளை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்தபோது, அதிக அளவில் பில்கள் சிஸ்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.