திருவள்ளூர்: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். ஆகவே, மோடி பிரதமராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை கொடுக்கும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மிக ஆபத்தானது. வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதற்கு குந்தகம் விளைவிக்கவே இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். இதனால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் மோடி பிரதமராக இருப்பாரா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறி. பிஹாரில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற உடன் தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தல் வரவும் வாய்ப்புள்ளது” என்றார்.