சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துப் பேசிய கருத்துகள் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
“மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல, அது இயற்கையான உடலியல் நிகழ்வு. அந்த நேரத்தில் ஏற்படும் வலியைப் பெரிதுபடுத்தாமல், நம் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பீரியட்ஸை எக்ஸ்கியூஸாகச் சொல்லக்கூடாது” என்ற தொனியில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

‘ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய்க்கால அனுபவம் மாறுபடும். சிலருக்குக் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி மற்றும் மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படும். இதை சாதாரண விஷயம் என்று சொல்வது அந்த வலியைக் கொச்சைப்படுத்துவது போன்றது. ஒரு பிரபலமாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவது, உழைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை போன்ற உரிமைகளைப் பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும்’ எனப் பலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஸ்ரீலீலாவின் கருத்தை ‘நேர்மறையான அணுகுமுறை’ (Positive approach) என்று ஆதரித்தும் கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.
மாதவிடாய் என்பதைக் காரணம் காட்டி, எந்த வேலையிலும் எக்ஸ்கியூஸ் கேட்பது சரியல்ல என்ற ஸ்ரீலீலாவின் வாதம் சரியானது என்றாலும், அந்த நாள்களில் ஏற்படும் வலி, வேதனையை சாதாரணமானவை என பொதுமைப்படுத்திப் பேசுவது தவறு என்பதே மருத்துவர்களின் கருத்தாகவும் இருக்கிறது. அது குறித்து விளக்கமாகப் பேசுகிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
சிலருக்கு சாதாரணம்…. சிலருக்கு பெரும் அவதி!
”பீரியட்ஸ் என்பது உடலியல் சார்ந்த நிகழ்வாக இருந்தாலும், அந்த நாள்களில் ஏற்படுகிற வலியும் அவதிகளும் நபருக்கு நபர் வேறுபடலாம். சிலருக்கு அவை பொறுத்துக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கலாம். சிலருக்கு பொறுத்துக்கொள்ள முடியாத அவதியாக இருக்கலாம். எனவே, இதெல்லாம் சகஜம்தான்… கடந்து போகத்தான் வேண்டும் என்று பொதுவான அட்வைஸாகச் சொல்வது சரியாக இருக்காது.

மாதவிடாய் நாள்களில் சிலர் தாங்கமுடியாத வலியையும் வேதனையையும் அனுபவிப்பார்கள். அதற்கான காரணங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமலும் இருக்கலாம். உதாரணத்துக்கு, எண்டோமெட்ரியாசிஸ்…. கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் கேவிட்டியில், சாதாரணமாக இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் திசுவானது, அங்கே இல்லாமல் வேறிடங்களில் இருப்பதையே எண்டோமெட்ரியாசிஸ் என்கிறோம். இந்தத் திசுவானது சினைப்பையிலோ, இடுப்பெலும்புப் பகுதியிலோ, சிறுநீர்ப்பையிலோ, கர்ப்பப்பையின் மேல் பகுதியிலோ…. இப்படி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
எண்டோமெட்ரியாசிஸ் பாதிப்புள்ள பெண்களுக்கு தீராத வயிற்றுவலி இருக்கும். பீரியட்ஸ் வருவதற்கு முன் தொடங்கி, பீரியட்ஸின் போதும் நீடித்து, பீரியட்ஸ் முடிந்தபிறகும் தொடரலாம். சிலருக்கு எப்போதுமே இந்த வலி தொடர்ந்து இருக்கலாம். இதனால் அவர்களால் சாதாரணமாகச் செய்யக்கூடிய வேலைகளைக்கூட செய்ய முடியாத நிலை ஏற்படும். பெயின் கில்லர் மாத்திரைகளும் பலன் தராமல் போகலாம். இப்படிப்பட்டவர்களிடம், மாதவிடாய் வலி, வேதனையைப் பெரிதுபடுத்தக்கூடாது என்று சொல்வது சரியாக இருக்காது.
அடினோமயோசிஸ்…
அதேபோல ‘அடினோமயோசிஸ்’ (Adenomyosis) என்றால் கரப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும்.
அதுதான் அடினோமயோசிஸ். ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கரப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடியவில்லை. அதனால்தான் இந்த பாதிப்புள்ள பெண்களுக்கு கரப்பப்பை பெரிதாகிறது. மாதவிடாயின் போது கடுமையான வலியும் இருக்கும்.

ஃபைப்ராய்ட்ஸ்…
கர்ப்பப்பையின் தசைப்பகுதியான மயோமெட்ரியம் பகுதியில் உருவாகக்கூடிய கேன்சர் அல்லாத கட்டிகள்தான் ஃபைப்ராய்ட்ஸ் எனப்படுகின்றன. இந்தக் கட்டிகள் கர்ப்பப்பையின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதிகளை நோக்கியும் வளரக்கூடும். தசைப்பகுதியில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும், உள்நோக்கி வளரும் கட்டிகளும்தான் அதிக பிரச்னைக்குரியவை. பரம்பரைத்தன்மை, மிக இளவயதில் பூப்பெய்துதல், உடல் பருமன், புகைப்பழக்கம், மன அழுத்தம் போன்றவை ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாகக் காரணங்களாகலாம்.
ஒருசிலருக்கு இது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. அதை ‘ஏசிம்டமேட்டிக் ஃபைப்ராய்டு’ என்று சொல்வோம். வேறு பிரச்னைகளுக்காக ஸ்கேன் செய்யும்போது இதைக் கண்டுபிடிப்பார்கள். கட்டிகள் அளவில் சிறியதாக இருந்தால் சிகிச்சை தேவையில்லை. ஃபைப்ராய்ட்ஸ் பிரச்னை உள்ளவர்களில் சிலருக்கு அதீத ரத்தப்போக்கு, கட்டிகளாக ரத்தம் வெளியேறுதல், பீரியட்ஸின்போது கடுமையான வலி, அடிவயிற்றுவலி, 7 முதல் 10 நாள்கள் வரை ப்ளீடிங் போன்றவை இருக்கும்.
பிறப்புறுப்புத் தொற்று…
பிறப்புறுப்பில் ஏற்படுகிற தொற்றானது சிறுநீர்ப்பாதை, அதற்கு மேல் பகுதி என பரவினாலும் ப்ளீடிங்கும் வலியும் அதிகமாக இருக்கும். இதை ‘பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ்’ (Pelvic Inflammatory Disease) என்று குறிப்பிடுவோம். இப்படி உடல்ரீதியான காரணங்களால் மாதவிடாய் நாள்களில் வலி, அதிக ப்ளீடிங் பிரச்னைகள் இருக்கலாம். எந்தக் காரணமும் இல்லாமலும் வலி இருக்கலாம். அதை ‘பிரைமரி டிஸ்மெனோரியா’ (Primary dysmenorrhea) என்று சொல்வோம். புராஸ்டாகிளாண்டின் என்ற வேதிப்பொருள் அதிகப்படியாக உற்பத்தியாவதால், கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகமாகி வலி தீவிரமாக இருக்கும். அதனால் உடல் இயக்கங்களைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்போருக்கும் அதிக ப்ளீடிங், நீண்ட நாள்கள் தொடரும் ப்ளீடிங், அதனால் ஏற்படும் அசௌகர்யம் போன்றவை இருக்கலாம்.

நார்மலா, அப்நார்மலா?
மாதவிடாய் நாள்களில் மிதமான வலிதான் இருக்கிறது, வழக்கமான வேலைகளைச் செய்ய முடிகிறது என்றால் செய்யலாம். இன்னும் சொல்லப்போனால் மிதமான உடற்பயிற்சிகூட இந்த நாள்களில் நல்லதுதான். பீரியட்ஸ் நாள்களில் ஏற்படுகிற வலியும் அசௌகர்யமும் வழக்கமாக ஏற்படும் அறிகுறிகள்தானா அல்லது மேற்குறிப்பிட்ட ஏதேனும் பிரச்னைகளின் அறிகுறிகளா என்ற தெளிவு முதலில் அவசியம். பெரிய பிரச்னையின் அறிகுறிகளாக இருந்து, அவற்றை சாதாரண அறிகுறிகளாக நீங்களாக நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருப்பது சரியல்ல.
ஒன்றிரண்டு மணி நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றுகிறீர்கள், ப்ளீடிங் அதிகம் இருக்கிறது, தலைச்சுற்றல் இருக்கிறது, அனீமியா எனப்படும் ரத்தச்சோகை இருக்கிறது, அன்றாட வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றால் அவற்றை மீறி வேலைகளைச் செய்ய வேண்டாம். மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்க வேண்டியது முக்கியம்.

சிகிச்சை மட்டுமே உதவாது!
என்னதான் சிகிச்சை உதவினாலும் ஊட்டச்சத்துள்ள உணவு, நல்ல உறக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை ஆகியவையும் முக்கியம். பீரியட்ஸ் என்பதை ஒரு எக்ஸ்கியூஸாகப் பயன்படுத்தக்கூடாது என்பது உண்மைதான். அதே சமயம், தீவிர பாதிப்புகள் இருக்கும்போது, உடல் கொடுக்கும் சிக்னல்களை அலட்சியப்படுத்தக்கூடாது. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பலவீனம் ஆகாது. ஒவ்வொருவரின் உடல்நலமும் ஒவ்வொரு மாதிரி. எனவே, அவரவர் உடலில் நிகழும் மாற்றங்களை அவரவர்தான் உணர முடியும். அது அசாதாரணம் என்று தெரிந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது” என்கிறார் டாக்டர் ஸ்ரீதேவி.