புது தில்லி: புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை நாளை (பிப்.13) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது 60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த பிப்.1-ஆம் தேதி மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரும் வாரம் அந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது.
இந்த நிலையில், புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை நாளை (பிப்.13) மக்களவையில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அது நாடாளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின்னர், அவற்றில் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து மீண்டும் அமைச்சரவை முடிவெடுக்கும்.
மொழி எளிமைப்படுத்தல் சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும் மாற்றும் என்றும், இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு அதிக வரி உறுதிப்பாட்டை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த புதிய மசோதா நேரடி வரி சட்டங்களை புரிந்துகொள்வதை எளிதாக்கும். வரிச் சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும்.