இந்நிலையில், இந்தத் தொகுதி நிலவரம் குறித்து அறிந்த விபரப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
“அறந்தாங்கி தொகுதியில் அதிகமுறை வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர்தான். கடந்த தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கி ஜெயிக்க வைத்தார். இந்த முறையும், தொகுதியை தனது மகனுக்குத் தக்க வைக்க வேண்டும் என்று பல வழிகளில் முயல்கிறார். ஆனால், தி.மு.க-வினர் அதற்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதையும் மீறி அவர் எப்படி சீட் வாங்கப் போகிறார் என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாக இருக்கிறது. அதேபோல், அ.தி.மு.க கூடாரத்திலும் சீட் பிடிக்க ஆளாளுக்குக் கடும் போட்டி போடுகிறார்கள்.
இந்தத் தொகுதியைப் பொறுத்தமட்டில் விவசாயிகள், மீனவர்கள் நிறைந்த தொகுதி. விவசாயம் சார்ந்தோ அல்லது மீனவர்கள் சார்ந்தோ இதுவரை இந்தத் தொகுதியில் பதவியை அலங்கரித்தவர்கள் பெரிதாக எந்தத் திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அதனால், யாருக்கு சீட் கிடைத்தாலும் இந்த விஷயங்களை முன்வைத்து பிரதான வாக்குறுதிகள் கொடுப்பவர்களுக்கே தொகுதி மக்கள் வாக்களிக்க விருப்பம் காட்டுவார்கள்” என்றார்கள்.