புதுச்சேரி: ரெஸ்டோபார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ மறியல் செய்தார்.
புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் மணிமேகலை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார் திறப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனை அறிந்த ராஜா நகர், முத்தமிழ் நகர், அருந்ததி நகர், பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று அந்த ரெஸ்டோபாரின் எதிர்புறத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு சம்பவ இடத்துக்கு வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நீடித்தது. தகவலறிந்த தாசில்தார் ராஜேஷ் கண்ணா, உருளையன்பேட்டை போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேசிய தாசில்தார் ராஜேஷ்கண்ணா, உடனடியாக ரெஸ்டோபார் திறக்கப்படாது. உயர்அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.