இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா” மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்’ பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளைச் செய்த கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர்.
அந்தப் போலி மருந்து தொழிற்சாலைகளுக்கும் அவற்றின் குடோன்களுக்கும் சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் உள்ளிட்ட 26 பேரைக் கைது செய்தனர்.
அதையடுத்து இந்த மோசடிக் கும்பலுடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, அரசு அதிகாரிகள் என அனைவரும் தொடர்பில் இருந்ததால், 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT – Special Investigation Team) அமைத்து உத்தரவிட்டார் ஆளுநர் கைலாஷ்நாதன்.

அதையடுத்து போலி மருந்துக்கும்பலுக்கு ஜி.எஸ்.டி மோசடியில் உடந்தையாக இருந்த முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
அதேசமயம், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளித்தன. ஆனால், `புதுச்சேரி காவல்துறையின் எஸ்.ஐ.டியே விசாரிக்கட்டும்’ என்று உறுதியாக அவற்றை நிராகரித்த கவர்னர், அதன்பிறகு வழக்கை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றினார்.
இதற்கிடையில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 34 மருந்து நிறுவனங்களின் மருந்துகளை விற்பதற்குத் தடை விதித்து, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மருந்தகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.